சைவத்திரு.மு.கதிர்காமநாதன் பெருமகனார் சிவபதம் பெற்றபோது திருமுறை ஓதி வழிபட்ட கழகத்தார்
இலங்கை சைவநெறிக் கழகம் முதன்முதலில் சைவ சமூகத் திருப்பணிக் கழகம் என்னும் பெயரில் 30-06- 2013ஆம் நாளன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் ஒன்றுகூடிய பொதுக்கூட்டத்தினூடாகத் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பாகும். இந்த அமைப்பைத் தோற்றுவிக்கவேண்டும் என்று சிந்தித்த சைவத்திரு.மரு.கி.பிரதாபன், சைவத்திரு.வி.துலாஞ்சனன்,சைவத்திரு.கோ.இளையராஜா,சைவத்திரு.சி.வினோதரூபன் முதலியோர் விடைக்கொடிச்செல்வர் சைவத்திரு.சின்னத்துரை தனபாலா பெருமகனாரை நாடி, தோற்றுவிக்கப்படும் சைவ சமூகத் திருப்பணிக் கழகத்தின் கொள்கைகளை எடுத்துவிளக்கியதோடு, சைவசமயக் கற்புநெறியில் தமிழரை ஆற்றுப்படுத்துவதற்குரிய அமைப்பாகச் சைவ சமூகத் திருப்பணிக் கழகம் விளங்கும் என்று உறுதிகூறியதும், விடைக்கொடிச்செல்வர் பெரும் மகிழ்ச்சியுற்றார். சைவசமயத்திற்கும் சுமார்த்தமதத்திற்கும் உரிய வேறுபாடுகளை எடுத்து விளக்கி, இன்று இந்துமதம் என்னும் பெயரில் சுமார்த்தமதமே இந்துமதமாகச் சைவசமயத்தாரிடம் வளர்க்கப்பட்டுவருகின்றதென்று விளக்கியபோது, இவற்றையெல்லாம் சைவப்பெருமக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டிய அவசியத்தை விடைக்கொடிச்செல்வர் வலியுறுத்தினார். தோற்றுவிக்கப்படும் அமைப்புக்குக் காப்பாளராக அவர் இருந்து பணியாற்றவேண்டும் என்று அமைப்புக்குழுவினர் ஒருமனதாக அவரிடம் விண்ணபித்தபோது, விடைக்கொடிச்செல்வர் ”அது தமக்குக் கிடைத்த பயன்” என்று பணிவோடு மகிழ்ந்து ஏற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாது, சைவத்திரு.கலாநிதி மு.கதிர்காமநாதன் பெருமகனாரைச் சந்திக்குமாறு வேண்டிக்கொண்டார். விடைக்கொடிச்செல்வரின் பணிப்பில் சைவத்திரு.மு.கதிர்காமநாதன் பெருமகனாரைச் சந்தித்தபோது, அவர் கழகக் கொள்கைகளையெல்லாம் கேட்டறிந்து மகிழ்ச்சியுற்றதோடு, இக்காலத்தில் இவற்றை ஆணித்தரமாக மக்களிடம் எடுத்து விளக்குதல் வேண்டும் என்று வலியுறுத்தினார். பொதுக்கூட்டத்தை எங்கு ஏற்பாடு செய்யவுள்ளீர்கள் என்று கேட்டார். அப்போது, கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் என்று கூறியதும், கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவராக விளங்கியதினால் தாமே விநோதன் மண்டபத்திற்குரிய பணத்தைச் செலுத்தி மண்டபத்தை 30- 06 – 2013ஆம் நாளன்று மாலை எமது கழகப் பொதுக்கூட்டத்திற்கென்று ஒதுக்கித் தந்தார்.
Comments
Post a Comment