இலங்கை கண்ட "முதலாவது" சைவம் போற்றுதும்
இலங்கையிற் பண்பாட்டையும் தத்துவத்தையும் கலையுடன் இணைத்து சைவம் வளர்க்கும் நிகழ்வுகள் அரிதென்ற நிதர்சனத்தினை உய்த்துணர்ந்த, இலங்கை சைவநெறிக் கழகத்தார் "சைவம் போற்றுதும்- 2018" என்கின்ற விழாவினை முதன்முதலில் 07ம் நாள் ஏப்பிரல் மாதம் 2018 அன்று, சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் அரங்கேற்றினர்.
இவ்விழாவிற்கு முதன்மை அனுசரணையை வெள்ளவத்தை நித்தியகல்யாணி நகைமாளிகையினரும், துணை அனுசரணையை சைவநெறித் தொண்டர் கழகம்-கனடா, சைவத்தமிழ் பண்பாட்டுப் பேரவை -டென்மார்க்,லிட்டில் ஏசியா எம்போரிய ஆடையகத்தினர் வழங்கியிருந்தனர். இவ்விழாவிற்கு குருவருளைப் பொலியும்முகமாக நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன இரண்டாம் குருமகாசந்நிதானம் பெருமானார் சீர்வளர்சீர் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் எழுந்தருளினார்கள். முதன்மை விருந்தினராக இந்துசமய கலாசார அமைச்சர் மாண்புமிகு டி.எம்.சுவாமிநாதன் அவர்களும், பீடுடைவிருந்தினராக வெள்ளவத்தை நித்தியகல்யாணி நகைமாளிகை அதிபர் திரு.அ.பி.ஜெயராஜா பெருமகனாரும் , மாண்புறு விருந்தினராக கழகத்தின் காப்பாளர் விடைக்கொடிச்செல்வர் திரு.சின்னத்துரை தனபாலா அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இவ்விழா, கழகத்தின் தலைவர் மரு.கி.பிரதாபன்(சிவத்திரு.ஈசான பிரதாபன் தேசிகர்) தலைமையிற் சிறப்புற நடைபெற்றது. விழாவினை கழகத்தின் பொருளாளரும் ஊடகத்துறையாளருமாகிய திரு.இரா.இராஜ்குமார் அவர்கள் தொகுத்து வழங்கினார்.


வரவேற்புரையை இலங்கை
சைவநெறிக் கழகத் துணைத் தலைவர்
செல்வி. செ.உதயகௌரி அவர்கள் ஆற்றினார்கள். 
வரவேற்பு நடனம் செல்வி ஹம்சத்வனி தேவதாஸ் அவர்களால் சிறப்பாக அனைவரும் உவக்குமாறு நிகழ்த்தப்பட்டது.



இவ்விழாவிற் நாயன்மார் அரங்கு என்னும் சொற்பொழிவு அரங்கு கழகத் தலைவர் மரு.திரு.கி.பிரதாபன் தலைமையிற், திரு.ஜீ.ஷஜீவன்(யாழ்ப்பாணம்), சிவத்திரு.இராஜ.தர்சக ஐயர், திரு.மெ.சாருஜன், சித்தாந்தரத்தினம் செல்வி.செ.உதயகௌரி ஆகியோர் கலந்து நால்வரைப் பற்றியும் இலக்கியநயத்துடன் சொற்பொழிவுகளை வழங்க, கழகத் தலைவர் மரு.கி.பிரதாபன் அவர்கள் இலக்கியநயத்துடன் கருத்துரைகளை நாயன்மார் பற்றி வழங்கினார்.






திரு.விமலநாதன் விமலாதித்தன் அவர்களின் தலைமையிற், திரு.அ.ஹரிசன், திரு.அ.கஜந்தன், திரு.வீ.சிந்துஜன் ஆகியோர் கலந்துகொண்டு சிவக்கவியரங்கு நடத்தினர்.சிவக்கவியரங்கினைச் சுவைத்த கூட்டத்தார், கவியரங்குகளைக் கண்ட தமிழுலகிற் சிவக்கவியரங்கென்ற "சிவமணம் கமழும் தமிழ்க் கவியரங்கு" அருமையானதொரு புத்தாக்கம் மட்டுமல்ல, சைவசமயத்தின் தத்துவத்தினை இலக்கியத்தோடு இணைக்கும் கந்தபுராணக் கலாச்சாரத்தின் நீட்சியென்று பாராட்டி மகிழ்ந்தனர்.

மட்டக்களப்பு-அம்பாறைத் திருகோவிற் பிரதேசத்தினைச் சேர்ந்த நாட்டுக்கூத்துக் கலைஞர்களால் அருச்சுனன் பாசுபதம் பெறல் நாட்டுக்கூத்து அரங்கேற்றப்பட்டது.
சைவநெறிச்செல்வர்,சைவமாமணி,சைவசமூகச்செம்மல்,மருத்துவ மாமணி, ஆசிரிய மாமணி விருதுகளுடன், சைவநெறிப் புரவலர் கலாநிதி மு.கதிர்காமநாதன் விருதும் சைவத்தொண்டர்களுக்கு வழங்கப்பட்டன. மேலும், சான்றோர்க்கு சிறப்புச்சால்பும் வழங்கப்பட்டது.
சைவம் போற்றுதும் என்னும்பெயரில் சைவசமய அடிப்படை விசயங்களையும் சிவபூமிச் சைவமுதலிகள்,சைவத்தேசிகர்,சைவத்தாதையர் வரலாறுகளையும், விருது நாயகர்களின் வரலாற்றுச் சிறுகுறிப்புக்களையும் உள்ளடக்கி நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

முதன்மை விருந்தினர்,பீடுடைவிருந்தினர்,மாண்புறு விருந்தினரின் உரைகளும் இடம்பெற்றன. சைவசமயத்து இளைஞர்களுக்கு ஒரு புதுவீரியம் அளிக்கும் விழா இதுவென்ற கருத்தினை விருந்தினர் சுட்டிக்காட்டினர்.


கழகப் பொதுச்செயலாளர் திரு.வி.துலாஞ்சனன் அவர்களின் நன்றியுரையுடன் கழகப்பண் இசைக்கப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது.

Comments
Post a Comment